இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை 12ஆம் தேதி டோமினிக்கா நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பாக அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

Advertisement

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸ்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்து 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா தனது 10-ஆவது சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

Advertisement

அதே வேளையில் ஒருபுறம் நிலைத்து விளையாடி வரும் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அறிமுக போட்டியிலேயே 215 பந்துகளை சந்தித்து மூலம் சதம் அடித்து அசத்தினார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் தற்போது ஏகப்பட்ட சாதனைகளை அவர் படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக அறிமுக போட்டியில் சதம் விளாசிய 17ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.

அதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகப் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் செய்துள்ளார். இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அறிமுகமான ரோஹித் சர்மா 2013ஆம் ஆண்டும், ப்ரித்வி ஷா 2018 ஆம் ஆண்டும் சதம் அடித்து இருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் இந்திய மண்ணில் சதம் அடிக்க தற்போது அயல்நாட்டு மண்ணில் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

அதேபோன்று டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி குறைந்த வயதில் சதம் அடித்த இந்திய வீரராக பிரித்வி ஷா (18), அப்பாஸ் அலி (20), குண்டப்பா விஸ்வநாத் (20) ஆகியோருக்கு அடுத்து ஜெய்ஸ்வால் 21 வயது 196 நாட்களில் சதம் அடித்து குறைந்த வயதில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நான்காவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும் அந்நிய மண்ணில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் அப்பாஸ் அலி, சுரேந்தர் அமர்நாத், பிரவீன் ஆம்ரே, சவுரவ் கங்குலி, விரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு அடுத்து ஏழாவது இந்திய வீரராக இந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News