2nd Test, Day 1: ஜெய்ஸ்வால் அரைசதம்; மீண்டும் ஏமாற்றிய ரோஹித், ஷுப்மன்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர ராஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, முகமது சிராஜிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜெய்ஸ்வாலுடன் இணைந்த ஷுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
அதன்பின் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஷுப்மன் கில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.