3rd Test, Day 4: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்!

Updated: Sun, Jul 13 2025 23:20 IST
Image Source: Google

Lord's Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களுக்கும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் அதிக பட்சமாக கேஎல் ராகுல் 13 பவுண்டரிகளுடன் 100 ரன்களையும், ரிஷப் பந்த் 8 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 74 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 72 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன் ஸ்கோரையும் சமன்செய்து அசத்தியது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 40 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களையும், ஹாரி புரூக் 23 ரன்களையும், ஸாக் கிரௌலி 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 192 ரன்களைச் சேர்த்து அல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் காரணமாக இந்திய அணிக்கு 193 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கருண் நாயரும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் 6 ரன்னிலும், ஆகாஷ் தீப் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 58 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து வெற்றிக்கு 135 தேவை என்ற இலக்குடன் இந்திய அணி நாளை கடைசி நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Also Read: LIVE Cricket Score

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை