Ashwin on Indian Team: ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆபார வெற்றியைப் பதிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணி எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம் கிடைக்காதது பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், அர்ஷ்தீப் சிங்கை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கியது குறித்து முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான முதல் போட்டியில், ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தார், அதே நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சிவம் துபே ஆகியோர் கூடுதல் வேக பந்து வீச்சாளர்களாக இருந்தனர். மேலும், குல்தீப் யாதவ், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி என மூவருக்கும் இடம் கிடைத்தது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர், “கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ், அணி பேட்டிங் ஆழம் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை அதிகம் நம்பியுள்ளது. ஏனெனில் சாம்பியன்ஸ் கோப்பையிலும் இந்திய அணி இதே பாணியை பின் பற்றியது . 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த அர்ஷ்தீப் போன்ற பந்து வீச்சாளர்களை இதுபோன்ற ஒரு உத்தியால் ஏமாற்றமடையக் கூடும்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அணிக்கு எதிராக கூடுதல் பேட்ஸ்மேன் தேவையில்லை.அத்தகைய சூழ்நிலையில், அர்ஷ்தீப்பிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். அர்ஷ்தீப்பின் இடத்தில் தான் இருந்திருந்தால், அது மிகவும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும், மேலும், இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையின் போது, சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பியிருப்பது ஆபத்தானது.
Also Read: LIVE Cricket Score
இரவுப் போட்டிகளின் ஆடுகளமும் சூழ்நிலையும் எப்போதும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்காது என்பதால், இனி வரும் போட்டிகளில் இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை லெவனில் சேர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அஸ்வினின் கருத்தானது இணையத்தில் வைரலாகி வருகிறது.