ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 47ஆவது லீக் அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியானது ருதுராஜ் கெய்க்வாட் சதத்தின் மூலமாகவும், இறுதி நேரத்தில் ஜடேஜா விளையாடிய அதிரடி ஆட்டம் காரணமாகவும் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது. பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்கத்திலேயே அதிரடி காட்டியது.
இறுதியில் 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதில் ஷிவம் தூபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அரைசதம் அடித்தார்.
இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில்,“இந்த போட்டியில் டாஸ் இழந்தது ஒரு மோசமான விடயம் ஆக மாறியது. 190 என்பது நல்ல ஸ்கோர் ஆக இருந்தாலும் டியூ காரணமாக பந்து எளிதாக பேட்டிற்கு வந்தது.
அதனை சரியாக பயன்படுத்திய ராஜஸ்தான் வீரர்கள் எங்களது பந்து வீச்சாளர்கள் மீது அழுத்தம் கொடுத்தனர். முதல் ஆறு ஓவரிலேயே அவர்கள் போட்டியை எங்களிடம் என்று எடுத்துச் சென்றனர். 250 ரன்களை குவித்து இருந்தால்கூட இந்த மைதானத்தில் எடுக்கக்கூடிய இலக்காகத்தான் இருந்திக்கும். அந்த அளவிற்கு அவர்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர்.
இந்த போட்டியில் எங்கள் அணியின் துவக்க வீரர் கெய்க்வாட் சிறப்பாக விளையாடினார். அவரது இன்னிங்க்ஸ் அருமையான ஒன்று. இருப்பினும் இதுபோன்ற போட்டிகளில் மைதானத்தின் தன்மையை விரைவில் கணித்து அதற்கேற்றார் போல் விளையாட வேண்டும். ஏனெனில் இந்த மைதானம் 160 முதல் 180 ரன்கள் வரை இலக்காக வைக்கக்கூடிய மைதானம் அல்ல. இது போன்ற மைதானங்களை விரைவாக கணித்து மிடில் ஓவர்களில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.