ஐபிஎல் தொடரின் 47வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்களை எடுத்து.
இமாலய இலக்கை இளம் வீரர்களை கொண்ட ராஜஸ்தான் அணி எட்டிப்பிடிக்காது என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதனை மாற்றி அமைத்தார் யாஷஸ்வி ஜெய்ஷ்வால். ஆட்டத்தின் முதல் பந்து முதலே சிஎஸ்கே பவுலர்களை அவர் மிரட்டினார். 21 பந்துகளை சந்தித்த அவர், 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ரன்களை விளாசினார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியடைந்தது.
இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜெய்ஷ்வால், “பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கினேன். அதற்கேற்றார் போலவே அமைந்தது. எனக்கு சரியான பந்துகளை மட்டும் சிக்ஸருக்கு விரட்ட வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே அப்போது இருந்தது. அதன்படியே சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கம் கொடுத்தேன்.
இப்போட்டி முடிந்தப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி, எனக்கு பரிசு ஒன்றை கொடுத்தார். அதாவது நான் விளையாடிய பேட்டில் எனக்காக அவர் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார். அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மறக்க முடியாத தருணம்” எனத்தெரிவித்தார். மேலும் அதுகுறித்த புகைப்படத்தையும் தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.