நான் எப்பொழுதும் சிஎஸ்கே அணிக்காகவே இருப்பேன் - எம் எஸ் தோனி!

Updated: Wed, May 24 2023 13:12 IST
IPL 2023: 'I Have 8-9 Months To Decide', Says Dhoni On Retirement Talks (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர்-1 ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

இந்நிலையில் வெற்றிகுறித்து பேசிய எம் எஸ் தோனி, “ஐபிஎல் மிகப்பெரிய தொடராக மாறி வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு மாத போராட்டங்களுக்குப் பிறகு பைனலுக்குள் வந்திருக்கிறோம். மற்ற சீசன்களில் 8 அணிகளுக்கு பழக்கப்பட்டுவிட்டோம். இம்முறை 10 அணிகள் விளையாடுகிறது. ஆகையால் மற்ற பைனல் போல் இதை எடுத்துக்கொள்ள முடியாது. இருப்பினும் பத்தாவது முறையாக வந்திருக்கிறோம். இவை அனைத்திற்கும் அணியில் உள்ள அத்தனை வீரர்களும் கொடுத்த பங்களிப்பு தான் முக்கிய காரணம்.

குஜராத் டைட்டன்ஸ் மிகச்சிறந்த அணி. அவர்கள் எந்த ஸ்கோரையும் சேஸ் செய்யக்கூடியவர்கள். ஆகையால் அவர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இன்றைய போட்டியில் டாசை இழந்ததும் எங்களுக்கு சாதகமாகத்தான் அமைந்துவிட்டது. ஜடேஜாவிற்கு குறிப்பிட்ட பிட்ச் நன்றாக ஈடுபட்டு விட்டால் அவரை அடிப்பது முற்றிலும் கடினம். அதேபோல் பேட்டிங்கில் மொயின் அலியுடன் சேர்ந்து அவர் அமைத்த பார்ட்னர்ஷிப்பை மறந்துவிடக்கூடாது.

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை, வீரர்களுக்கு ஏற்ற சூழல் அமைத்துக் கொடுக்கிறோம். அதேபோல் அவர்களுக்கு என்ன எடுபடும் என்பதை கவனித்து அதற்கேற்றவாறு விளையாட வைக்கிறோம். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்து வருகிறோம். அவர்களிடம் நான் சொல்வது ஒன்று மட்டுமே, ‘உங்களுடைய பௌலிங் எப்படிப்பட்டது? உங்களுடைய பலம் என்ன? என்பதை தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருங்கள். அதில் செயல்பட்டுக் கொண்டே இருங்கள்.’

அணியில் இருக்கும் சப்போர்ட் அதிகாரிகள் தொடர்ந்து வீரர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகின்றனர். அணியில் பிராவோ மற்றும் எரிக் போன்ற பயிற்சியாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் நன்றாகவே பார்த்துக்கொள்கின்றனர். இந்த விக்கெட் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து தொடர்ந்து பீல்டிங்கை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். நான் மைதானத்தில் சற்று எரிச்சல் ஊட்டக்கூடிய கேப்டனாக இருக்கிறேன் என நினைக்கிறேன். ஏனெனில் பீல்டிங்கில் வீரர்கள் 2-3 அடிகள் சற்று தள்ளிநின்றாலும் நான் வீரர்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அவர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறேன்.

பீல்டிங்கில் செய்கையில் நான் வீரர்களிடம் சொல்வது ஒன்று மட்டும்தான், ‘நீங்கள் கேட்ச்சை தவறவிட்டாலும், பந்தை தவறவிட்டாலும் உடனடியாக என்னை பாருங்கள். என் மீது ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்.’ என்பேன். அதற்காக அவர்களை நான் ஒன்றும் திட்டப்போவதில்லை.நான் எப்பொழுதும் சிஎஸ்கே அணிக்காகவே இருப்பேன். அதை உள்ளே நின்று விளையாடினாலும் வெளியில் இருந்தாலும் சிஎஸ்கே அணி மட்டுமே” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை