ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

Updated: Sat, Apr 01 2023 05:59 IST
Image Source: Google

ஐபிஎல் 16ஆவது சீசன் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச தீர்மானித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தார். 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் முதலே அடித்து விளையாடி 23 பந்தில் அரைசதம் அடித்தார். ஒருமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் டெவான் கான்வே (1), மொயின் அலி(23), பென் ஸ்டோக்ஸ்(7), அம்பாதி ராயுடு(12) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். 

இதில் அதிரடியாக விளையாடி  சதத்தை நெருங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்தில் 9 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் என 92 ரன்களை குவித்து 8 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அதன்பின் ஜடேஜா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஷிவம் துபே 19 ரன்கள் அடித்தார். தோனி கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என 14 ரன்கள் விளாசி இன்னிங்ஸை முடித்து கொடுத்தார்.

இதன்மூலம் இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் முகமது ஷமி, அல்ஸாரி ஜோசப், ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் விருத்திமான் சஹா - ஷுப்மன் கில் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய சஹா 25 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் ஷுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா 7 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து 63 ரன்களைச் சேர்த்திருந்த ஷுப்மன் கில்லும் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து அதிரடியாக விளையாடி வந்த விஜய் சங்கர் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹங்கர்கேகர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் குஜராத் அணி வெற்றிக்கு 23 ரன்களை தேவைப்பட்டது. தீபக் சஹார் வீசிய அந்த ஓவரில் ரஷித் கான் அடுத்தடுத்து சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி அணியின் பிரஷரைக் குறைத்தார். 

இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றிக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதில் ராகுல் திவேத்தியா சிக்சரை பறக்கவிட்டு அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. சென்னை அணி தரப்பில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை