திருடப்பட்ட டெல்லி அணி வீரர்களுடைய உபகரணங்கள் மீட்கப்பட்டது - டேவிட் வார்னர்!
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. கடந்த 5 போட்டிகளில் விளையாடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதையடுத்து, நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. எனினும், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் தான் உள்ளது.
இந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “அவர்கள் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். ஒரு சில உபகரணங்கள் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. எனினும், நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 15 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் மணீஷ் பாண்டே மட்டுமே 50 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, இந்தப் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
அப்போட்டியை முடித்து டெல்லி அணி வீரர்கள் பெங்களூருவிலிருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். வீரர்கள் டெல்லியில் தரையிறங்கிய போது அவர்களது உடமைகளிலிருந்து, 16 பேட், பேடு, கிளவ்ஸ் உள்ளிட்ட உபகரணங்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியானது. விமான பயணத்திற்கு பிறகு ஒரு நாள் கழித்து சரக்குகளில் இருந்து கிட் பேக்குகள் வந்ததால், ஒரு நாள் கழித்து தான் தங்களது உபகரணங்கள் திருடப்பட்டிருப்பதாக வீரர்கள் அறிந்துள்ளனர்.
இதில், யாஷ் துல் தனது 5 பேட்டுகளை இழந்துள்ளார். டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தனது 3 பேட்டுகளையும், மிட்செல் மார்ஷ் தனது 2 பேட்டுகளையும் இழந்துள்ளார். பில் சால்ட் தனது 3 பேட்டுகளை இழந்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 16 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், டெல்லி வீரர்களின் உபகரணங்களை திருடிய திருடனை கண்டுபிடித்துள்ளனர். எனினும், திருடப்பட்ட உபகரணங்களை பத்திரமாக ஒப்படைத்துள்ளனர். ஆனால் திருடன் யார் என்பது குறித்து விவரத்தை காவல்துறை தெரிவிக்கவில்லை. ஆனால், ஒரு சில உபகரணங்கள் கிடைக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.