ஐபிஎல் 2023: கோலி, டூ பிளெசிஸ் அதிரடியில் மும்பையை ஊதித்தள்ளியது ஆர்சிபி!

Updated: Sun, Apr 02 2023 23:15 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இசான் கிஷன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

ஆர்சிபி தரப்பில் அபாரமாக பந்துவீசி வந்த சிராஜ்,  இஷான் கிசன்(10) விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் ரோஹித் சர்மா கொடுத்த கேட்சை, தினேஷ் கார்த்திக் மீது மோதி கோட்டைவிட்டார். 2 கேட்ச் தவறவிட்டதன் மூலம் கிடைத்த வாய்ப்பை ரோஹித் சர்மா பயன்படுத்திக் கொள்ளவில்லை. 10 பந்துகளில் வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்து, அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.

கேமரூன் கிரீன் 5 ரன்கள், சூரியகுமார் யாதவ் 15 ரன்கள் அடித்து வெளியேற, மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது மும்பை அணி. அப்போது உள்ளே வந்த திலக் வர்மா ஆரம்பம் முதலே ஒரு பக்கம் நின்றுகொண்டு அதிரடியாக விளையாடி, தனி ஆளாக போராடினார். திலக் வர்மாவுடன் நன்றாக பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வந்த நேகல் வதேரா, 21 ரன்களுக்கு அவுட் ஆனார். 

பின் வந்த டிம் டேவிட் 4 ரன்கள்,  ஹ்ரித்திக் ஷோகீன் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மும்பை அணி மீண்டும் தடுமாற்றம் கண்டது. இருப்பினும் நிறுத்தாமல் பவுண்டரி சிக்ஸர்களாக அடித்த திலக் வர்மா, மும்பை அணியின் ஸ்கொரை 150 ரன்களுக்கும் மேல் கொண்டு சென்றார். பின்னர் கடைசி 2 ஓவர்களில் 16 ரன்கள் மற்றும் 22 ரன்கள் முறையே அடித்து, 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணியின் ஸ்கொரை 171 ஆக மாற்றினார். இறுதிவரை அவுட்டாகாமல் ஒற்றை ஆளாக போராடிய திலக் வர்மா 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 46 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இன்னிங்ஸின் முதல் ஓவரிலிருந்தே அதிரடி காட்டத்தொடங்கிய இந்த இணை மும்பை அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் பாரபட்சம் பார்கள் அடித்து விளாசினார். 

தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய இருவரும் அரைசதம் கடக்க, இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 148 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையிலும் சேர்த்தனார். பின் 5 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 73 ரன்களைச் சேர்த்திருந்த டூ பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

இதையடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் தனது பங்கிற்கு அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 6 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 82 ரன்களைச் சேர்த்ததுடன் சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி 16.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை