ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங் அதிரடி ஃபினிஷிங்; ஆர்சிபி அணிக்கு 177 ரன்கள் இலக்கு!

Updated: Mon, Mar 25 2024 21:15 IST
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங் அதிரடி ஃபினிஷிங்; ஆர்சிபி அணிக்கு 177 ரன்கள் இலக்கு! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியானது முதைல் பந்துவீசுவதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியின் அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். 

இப்போட்டியில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய ஜானி பேர்ஸ்டோவ் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய இளம் வீரர் பிரப்ஷிம்ரன் சிங்கும் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 25 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோனும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 17 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஷிகர் தவான் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 98 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த சாம் கரண் - ஜித்தேஷ் சர்மா இணை அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அதிரடியாக விளையாடி வந்த சாம் கரண் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஜித்தேஷ் சர்மாவும் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து 6ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷஷாங்க் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதிலும் குறிப்பாக 20ஆவது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரிகளை விளாசியதுடன் 21 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை