பவர் பிளேவில் அதிர்ச்சி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; ரோஹித், சூர்யா ஏமாற்றம்!

Updated: Tue, Apr 30 2024 20:26 IST
பவர் பிளேவில் அதிர்ச்சி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; ரோஹித், சூர்யா ஏமாற்றம்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தர். 

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தனது பிறந்தநாளான இன்று ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக தொடங்கினாலும் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

 

அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து வந்தார். அதன்பின் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திலக் வர்மாவும் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியனுக்குத் திரும்ப, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 

 

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியானது முதல் 6 ஓவர்களிலேயே 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 28 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து இணைந்துள்ள இஷான் கிஷன் - நெஹால் வத்ரே ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை