டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமனம்?
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி மார்ச் 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் கேப்டன்களும் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மட்டும் இறுதிசெய்யாமல் உள்ளது.
ஏனெனில் கடந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பந்த் ஏலத்திற்கு முன்னதாக அணியில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து நடைபெற்று முடிந்த வீரர்கள் ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேஎல் ராகுல், ஃபாஃப் டூ பிளெசிஸ், கருண் நாயர், அக்ஸர் படேல் போன்ற வீரர்களை ஏலத்தில் எடுத்தது. இதில் அக்ஸர் படேலே ஏலத்திற்கு முன்னதாகவே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.18 கோடிக்கு தக்கவைத்தது.
இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கேல் ராகுல், ஃபாஃப் டூ பிளெசிஸ் அல்லது அக்ஸர் படேல் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து கேஎல் ராகுலிடன் கேப்டன்சிகான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், ஆனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் தான் ஒரு வீரராக மட்டுமே விளையாட விரும்புவதாக கேஎல் ராகுல் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரின் போதே அக்ஸர் படேல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டு வந்தார். இதுதவிர்த்து சமீபத்தில் இந்திய டி20 அணியின் துணைக்கேப்டனாகவும் அகஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
டெல்லி கேப்பிட்டல்ஸ்: கேஎல் ராகுல், ஹாரி புரூக், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, ஃபஃப் டு பிளெஸ்சிஸ், முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.