ஐபிஎல் 2025 எலிமினேட்டர்: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!

Updated: Fri, May 30 2025 23:42 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மாற்றொரு அணி எது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

அந்தவகையில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜானி பேர்ஸ்டோவ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரோஹித் சர்மாவுடன் இணைந்த சூர்யகுமார் யாதவும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரோஹித் சர்மா அரைசதம் கடந்தார். பின்னர் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 33 ரன்களில் சூர்யகுமார் யாதவும், 9 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 81 ரன்களில் ரோஹித் சர்மாவும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மாவும் 25 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

இறுதியில் அதிரடியாக விளையாட முயற்சித்த நமன் தீர் 9 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசியதுடன் 22 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களைக் குவித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாய் கிஷோர் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷுப்மன்கில் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 20 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் சாய் சுதர்ஷனுடன் இணைந்த வாஷிங்டன் சுந்தர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் சாய் சுதர்ஷன் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். 

மேற்கொண்டு இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து 10 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என 80 ரன்களைச் சேர்த்த கையோடு சாய் சுதர்ஷனும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டும் 24 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் குஜராத் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

Also Read: LIVE Cricket Score

இதில் ஷாருக் கான் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க குஜராத் டைட்டன்ஸின் தோல்வியும் உறுதியானது. இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை மட்டுமே சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை