முதல் பந்திலேயே விக்கெட் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை - ஜோஃப்ரா ஆர்ச்சர்!

Updated: Sun, Apr 06 2025 20:15 IST
Image Source: Google

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சண்டிகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் புள்ளிப்பட்டியலிலும் 6ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் தோல்வியையே தழுவாமல் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ர ஆர்ச்சர் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியில் பங்காற்றினார். 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஆர்ச்சர், “நான் வீரர்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க முடிந்தால், மறுமுனையில் இருந்து வரும் பந்து வீச்சாளர் அதையே செய்வார்கள். மேலும் அவர்கள் பேட்டர்கள் மீது அழுத்தத்தை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். உண்மையைச் சொன்னால், பந்து இன்னும் கொஞ்சம் ஸ்விங் ஆக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது இவ்வளவு பெரிய பலனைத் தரும் என்று நான் நிசசயமாக எதிர்பார்க்கவில்லை. 

ஆனால் முதல் பந்திலேயே ஒரு விக்கெட்டை வீழ்த்தி, போட்டியின் போக்கை அமைத்துக் கொடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது அனைவருக்கும் புத்துணர்ச்சியை அளித்தது, இறுதியில் வெற்றி பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களைக் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 67 ரன்களையும், ரியான் பராக் 43 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களையும் சேர்த்து அசத்தினர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், நேஹால் வதேரா 62 ரன்களையும், கிளென் மேக்ச்வெல் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை