ஐபிஎல் 2025: சுனில் நரைன் அபாரம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!

Updated: Tue, Apr 29 2025 23:25 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 48ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியான தொடக்கத்தைப் பெற்றிருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரைனும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களிலும், அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி - ரிங்கு சிங் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகுவன்ஷி 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 44 ரன்னிலும், ரிங்கு சிங் 36 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

இறுதியில் ஆண்ட்ரே ரஸல் மற்றும் ரோவ்மன் பாவேல் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் பாவெல் 5 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய அனுகுல் ராய் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, அதன்பின் 17 ரன்கள் எடுத்திருந்த கையோடு ஆண்ட்ரே ரஸலும் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், விப்ராஜ் நிகம் மற்றும் அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் போரல் பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஒருபக்கம் ஃபாஃப் டூ பிளெசிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுமுனையில் விளையாடிய கருண் நாயர் 15 ரன்னிலும், கேஎல் ராகுல் 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து டூ பிளெசிஸுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் அக்ஸர் படேல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். மேற்கொண்டு இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் அதிரடியாக விளையாடி வந்த அக்ஸர் படேல் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 43 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்த கையோடு ஃபாஃப் டூ பிளெசிஸும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

பின்னர் களமிறங்கிய விப்ராஜ் சிங் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணிக்கு நம்பிக்கை கொடுத்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய அஷூதோஷ் சர்மா 7 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதனால் டெல்லி அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 38 ரன்கள் தேவை என்ற நிலையில் விப்ராஜ் நிகம் 19ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என மொத்தமாக 13 ரன்களைச் சேர்க்க, கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. 

Also Read: LIVE Cricket Score

ஆண்ட்ரே ரஸல் வீசிய இறுதி ஓவரிலும் விப்ராஜ் சிங் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய நிலையில், 5  பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 38 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்தது. கேகேஆர் தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை