ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது.
இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன. இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது தங்களது தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்கை பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
மேற்கொண்டு எதிர்வரவுள்ள வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்களும் தங்கள் அணியில் இருந்து விலகி ஏலத்தை எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்களும் மாற்றப்படவுள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தொடர் முதல் அவர் தனது பணியை தொடங்கவுள்ளார்.
இந்த நிலையில் தான் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ராஜஸ்தான் அணிக்காக ராகுல் டிராவிட் கேப்டனாகவும், ஆலோசகராகவும் ஏற்கெனவே செயல்பட்டுள்ளதால் அவரது நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.