ஐபிஎல் 2025: சாய் சுதர்ஷன் அரைசதம்; ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 218 டார்கெட்!

Updated: Wed, Apr 09 2025 21:25 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இன்றைய ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் சுதர்ஷனுடன் இணைந்த ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 36 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாரூக் கானும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. பின்னர் ஷாரூக் கானும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். 

Also Read: Funding To Save Test Cricket

இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்ஷன் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 82 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடிய ரஷித் கானும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் திவேத்தியா இரண்டு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 24 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை