இரானி கோப்பை 2024: ரஹானே, ஸ்ரேயாஸ், சர்ஃப்ராஸ் அரைசதம்!

Updated: Tue, Oct 01 2024 20:43 IST
Image Source: Google

இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், இந்திய அணிக்காக விளையாடிவரும் மற்ற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் இந்த ஆண்டிற்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. அதன்படி இப்போட்டியில் கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு பிரித்வி ஷா மற்றும் ஆயுஷ் மத்ரே இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்திக் தோமரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான ஆயுஷ் மத்ரே 19 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் மும்பை அணி 37 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் அஜிங்கியா ரஹானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் நான்காவது விக்கெட்டிற்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியதுடன், இருவரும் தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 57 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சர்ஃப்ராஸ் கானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் மும்பை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 237 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேப்டன் அஜிங்கியா ரஹானே 86 ரன்களுடனும், சர்ஃப்ராஸ் கான் 54 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், யாஷ் தயாள் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை