இரானி கோப்பை 2024: பிரித்வி ஷா அரைசதம்; வலிமையான இலக்கை நோக்கி மும்பை அணி!

Updated: Fri, Oct 04 2024 20:09 IST
Image Source: Google

இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், இந்திய அணிக்காக விளையாடிவரும் மற்ற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் இந்த ஆண்டிற்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரானது லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இப்போட்டியில் கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய மும்பை அணியானது சர்ஃப்ராஸ் கானின் இரட்டை சதத்தின் மூலமும், அஜிங்கியா ரஹானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது அரைசதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 537 ரன்களைக் குவித்து அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சர்ஃப்ராஸ் கான் 25 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 223 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேசமயம் அஜிங்கியா ரஹானே 97 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களையும் சேர்த்தனர். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் சதமடித்து அசத்தியதுடன் 191 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவருக்கு துணையாக விளையாடிய துருவ் ஜூரெல் 93 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தவிர்த்து சாய் சுதர்ஷன் 32 ரன்களையும், இஷான் கிஷான் 38 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

மும்பை அணி தரப்பில் ஷம்ஸ் முலானி, தனூஷ் கோட்டியான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மோஹித் அவஸ்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து மும்பை அணியானது 121 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் பிரித்வி ஷா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஆயூஷ் மத்ரே 14 ரன்களுக்கும், ஹர்திக் தோமர் 7 ரன்களுக்கும், கேப்டன் அஜிங்கியா ரஹானே 9 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

ஆனாலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பிரித்வி ஷா தனது அரைசதத்தை கடந்த நிலையில், 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 76 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவருக்கு அடுத்து களமிறங்கிய ஷம்ஸ் முலானியும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் மும்பை அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சர்ஃப்ராஸ் கான் 9 ரன்களுடனும், தனுஷ் கோட்டியன் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 274 ரன்கள் முன்னிலையுடன் மும்பை அணி நாளை ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை