அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பெல்ஃபெஸ்டில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஸ்டிர்லிங் 33 ரன்களில் ஆட்டமிழக்க, போர்ட்டர்ஃபீல்ட் அரைசதம் அடித்து அசத்தினார்.
அதன்பின் 67 ரன்களில் போர்ட்டர்ஃபீல்ட் ஆட்டமிழக்க, அடுத்துவந்த பால்பிர்னி 40 ரன்களிலும், ஹேரி டெக்டர் 55 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி ஜிம்பாப்வோ அணி களமிறங்குவதாக இருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் இரண்டாவது ஒரு பந்துகூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.