இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 34ஆவது லீக் போட்டியானது இன்று லக்னோ நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், நெதர்லாந்து அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதலில் விளையாடிய நெதர்லாந்து அணியானது ஆஃப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே குவித்தது.

Advertisement

ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக முகமது நபி 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியானது நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு 31.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 181 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு இந்த தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி இன்று பெற்ற வெற்றியின் மூலம் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு சென்றுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து நாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, “நாங்கள் இன்றைய போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே மிகச்சிறப்பாக செயல்பட்டோம். இந்த தொடரில் மூன்றாவது முறையாக இலக்கினை மிகச் சிறப்பாக சேசிங் செய்து வெற்றி பெற்றுள்ளோம். நாங்கள் சேசிங்கின் போது எதிரணியை பார்த்து அவர்களின் திட்டத்திற்கு ஏற்ப மைதானத்தின் சூழ்நிலை கருத்தில் கொண்டு சேசிங் திட்டங்களை சிறப்பாக வகுத்து வெற்றி கண்டு வருகிறோம். 

எங்களது அணியில் முகமது நபி ஒரு ஸ்பெஷல் பிளேயர். எப்போதெல்லாம் அணிக்கு அவரிடம் இருந்து ஒரு சிறப்பான பங்களிப்பு தேவையோ அப்போதெல்லாம் அவர் தனது முழு திறனையும் அந்த போட்டியில் வெளிப்படுத்துகிறார். நாங்கள் ஒரு அணியாக மிகவும் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறோம். அதன் காரணமாகவே எங்களால் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வர முடிகிறது. அரையிறுதிக்கு முன்னேறுவதற்காக எங்களுடைய முழு திறனையும் வெளிப்படுத்த காத்திருக்கிறோம். அப்படி நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறினால் அது எங்களுக்கு மிகப்பெரிய சாதனையாக அமையும். 

மூன்று மாதங்களுக்கு முன்னர் எனது அம்மா தவறிவிட்டார். அதன் காரணமாக எங்களது குடும்பமே தற்போது வலியில் இருக்கிறது. ஒருவேளை நாங்கள் அரையிறுதிக்கு செல்லும் பட்சத்தில் எங்களது நாடும் பெருமை அடையும், எங்களது குடும்பமும் பெருமையடையும். தற்போது ஆஃப்கானிஸ்தான் நாட்டில் சூழல் சற்று சரியாக இல்லை. அங்கு மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை நாங்கள் வீடியோக்கள் மூலம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தற்போது கஷ்டப்பட்டு வரும் மக்களுக்காக இந்த வெற்றியை நான் ஆறுதலாக அர்ப்பணிக்கிறேன்” என கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News