வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் - மௌனம் கலைத்த டேவிட் வார்னர்!

Updated: Mon, Jan 01 2024 17:56 IST
வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் - மௌனம் கலைத்த டேவிட் வார்னர்! (Image Source: Google)

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட தொடருடன் நட்சத்திர தொடக்க ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விடை பெறுவதாக 2024 புத்தாண்டு தினத்தன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அறிவித்துள்ளார். 

கடந்த 2009இல் அறிமுகமான அவர் 2015 மற்றும் 2023 உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர். மேலும் கடந்த சில வருடங்களாக ஃபார்மை இழந்து தடுமாறிய போது எழுந்த விமர்சனங்களுக்கு 2021 டி20 உலகக் கோப்பையின் தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்த அவர் ஆஸ்திரேலியா முதல் முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை முத்தமிட உதவினார். 

அந்த வகையில் நவீன கிரிக்கெட்டின் சிறந்த அதிரடி துவக்க வீரர்களில் ஒருவராக அறியப்படும் அவர் ரசிகர்களின் பாராட்டுகளுடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற உள்ளார். அப்படி சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படும் டேவிட் வார்னர் கேரியரில் 2018 பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கு காலத்தால் அழிக்க முடியாத கருப்பு புள்ளியாக அமைந்தது என்றே சொல்லலாம். 

அதாவது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2018 கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி பான் கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது தொலைக்காட்சியில் அம்பலமானது. இறுதியில் அதற்காக நடத்தப்பட்ட விசாரணையில் அது நிரூபனமானதால் அந்த மூவருக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 

குறிப்பாக 12 மாதங்கள் அனைத்து விதமான கிரிக்கெட்டில் விளையாட தடை பெற்ற டேவிட் வார்னர் வாழ்நாள் முழுவதும் ஆஸ்திரேலியாவுக்காக கேப்டன்ஷிப் செய்வதற்கு தடை பெற்றார். இந்நிலையில் 2024 புத்தாண்டு தினத்தில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடும் போது அது பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினார்கள்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்த கேள்வி வரும் என்று எனக்கு தெரியும். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த விவகாரத்தை திரும்பிப் பார்த்தால், அதனை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் எனத் தோன்றியது. ஆனால், அப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தினால் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அந்த முடிவில் எனக்கு மகிழ்ச்சிதான். ஐபிஎல் போட்டிகளில் அணியைக் கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு  கிடைத்தது. ஒரு கேப்டனாக ஐபிஎல் போட்டிகளில் அணியை வழிநடத்தியது மகிழ்ச்சியளித்தது. 

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எனக்கு தோன்றுகிற விஷயம் என்னவென்றால், கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் பொறுப்பு என்பது வெறும் பேட்ஜ்களை அணிந்து கொள்வது மட்டுமல்ல. என்னைப் பொறுத்தவரை அணியில் நான் என்னவாக இருந்தாலும் என்னுள் தலைமைப் பண்பு உள்ளது. அதற்கு நமது பெயருக்குப் பின்னால் கேப்டன் அல்லது துணைக் கேப்டன் பதவியின் பெயர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை