தீப்தி சர்மா ரன் அவுட் சர்ச்சை; வருத்தம் தெரிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

Updated: Thu, Oct 06 2022 13:14 IST
James Anderson once again slams Deepti Sharma over run-out incident (Image Source: Google)

உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்ற 3ஆவது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றிக்காக போராடிய இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்த கிரீஸை விட்டு வெளியேறியதால் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக பவுலர்கள் ஒரு இன்ச் காலை வெளியே வைத்தாலும் உடனடியாக நோ-பால் வழங்கி அதற்கு தண்டனையாக பிரீ ஹிட் கொடுக்கப்படும் நிலையில் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு நியாயமா என்ற கருத்துடன் ஐபிஎல் தொடரில் பட்லரை மன்கட் செய்த அஸ்வின் உலகின் அனைத்து பவுலர்களும் அதை செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார்.

அதில் நியாயமும் இருந்ததால் கிரிக்கெட் விதிமுறைகள் நிர்வகிக்கும் லண்டனின் எம்சிசி அமைப்பு மன்கட் அவுட்டை நேர்மைக்குப் புறம்பான பிரிவிலிருந்து ரன் அவுட் பிரிவுக்கு மாற்றி வெளியிட்ட அறிவிப்பை சமீபத்தில் ஐசிசியும் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் இந்நாள் இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் தீப்தி சர்மா நேர்மைக்கு புறம்பாக செயல்பட்டதாக கடுமையாக விமர்சித்தனர்.

அதற்கு அதிக பவுண்டரிகளை அடித்தோம் என்ற விதிமுறையை காட்டி தோற்காத நியூசிலாந்தை ஏமாற்றி 2019 உலகக்கோப்பை வென்றதை விட தீப்தி சர்மா செய்தது மோசமில்லை என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். முன்னதாக அப்போட்டியில் பந்து வீச வேண்டும் என்பதைவிட ரன் அவுட் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தீப்தி செயல்பட்டதாக இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் விமர்சித்திருந்தார். அதிலிருந்து பின்வாங்காத அவர் ஒரு பவுலராக பேட்ஸ்மேன்கள் அவ்வாறு செய்வதை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதனால் இதற்கு ஒரே தீர்வாக மன்கட் செய்வதை விட எச்சரிக்கை கொடுத்து அதை செய்யும் பேட்ஸ்மேன்களுக்கு தண்டனையாக பெனால்டி ரன்களை வழங்க வேண்டும் என்ற தீர்வை கூறியுள்ளார். 

இதுபற்றி பேசிய அவர், “அதை வெறும் 30 நொடிகள் நினைக்கும்போதே எனக்கு எரிச்சலாகிறது. அது தற்போது விளையாட்டின் விதிமுறைகளில் உள்ளதால் அவர்கள் அதை வெளிப்படையாக செய்கின்றனர். அது இப்போது ரன் அவுட்டாகும். அதனால் தற்போது அதை செய்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என்பதால் பேட்ஸ்மேன்கள் கோட்டுக்குள்ளேயே இருப்பார்கள் என்று நம்புகிறேன். இருப்பினும் அன்றைய நாளில் நான் சார்லிக்காக மிகவும் வருந்துகிறேன். 

ஏனெனில் கடுமையாகப் போராடிய அவர் இங்கிலாந்தை வெற்றி பெற வைத்திருப்பார். அவர் அப்போட்டியில் நிலவிய சூழ்நிலையை அற்புதமாக சமாளித்தாரே தவிர ரன்களை திருடவில்லை. மாறாக பந்து வீசுவதற்கு முன் நகர்ந்து விட்டார். இப்படி பவுலர்கள் பந்துவீச வரும்போது பேட்ஸ்மேன்களும் முன் நோக்கி நகர்வது இயற்கையாகவே நடைபெறக் கூடியதாகும். இங்கு தீப்தி சர்மாவுடன் எனக்கு பிரச்சனை என்னவெனில் அவர் பந்து வீசும் எண்ணத்துடன் வரவில்லை.

சார்லியை கவனித்து அவர் வெளியேறியதும் ரன் அவுட் செய்தார். அது மட்டுமே இன்னும் அந்த அவுட்டை பொறுத்தவரை எனக்கு கடுப்பாக வைக்கிறது. மேலும் அவ்வாறு அவர் செய்வதற்கு முன்பாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாக இந்திய அணியினர் தெரிவிக்கும் நிலையில் இங்கிலாந்து அணியினர் அதை மறுக்கின்றனர். இருப்பினும் அந்த அவுட்டில் நேர்மை இருப்பதாக கிரிக்கெட் விளையாடும் எனக்கு தோன்றவில்லை. அதை செய்ய உங்களிடம் என்ன நுணுக்கம் உள்ளது? எவ்வித சிரமுமின்றி அதை செய்வதால் எனக்கு பிடிக்கவில்லை.

அதே சமயம் பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவதற்கு முன்பாக கோட்டை விட்டு வெளியேறுவதையும் நான் விரும்பவில்லை. ஆனால் அதற்காக அவுட் செய்ய வேண்டுமென நான் கூறவில்லை. அந்த இடத்தில் எச்சரிக்கை அல்லது பெனால்டி ரன்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதிலும் ஒருசில எச்சரிக்கை கொடுத்து விட்டு இறுதியாக பெனால்டி கொடுப்பதே இதற்கு சரியான தீர்வாகும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை