என்னை பொறுத்தவரை இதுதான் மிகச்சிறந்த ஃபார்மெட் - ஜஸ்பிரித் பும்ரா ஓபன் டாக்!
India vs Bangladesh Test 2024: இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு தேர்வுக் குழு ஓய்வு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தான் மீண்டும் அணியில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதால் தான் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கிரிக்கெட்டை பொறுத்தவை பேட்டர்களை காட்டிலும் பந்துவீச்சாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவர்கள் பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். மேலும் பந்துவீச்சாளர்கள் பேட்டுக்கு பின்னால் மறைந்து கொள்வதில்லை.
ஆனால் போட்டியில் தோல்வியடைந்தால் அதற்கு பந்துவீச்சாளர்களையே அதிகம் விமர்சிப்பார்கள். அதனால் இது மிகவும் கடினமான வேலை. அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் சிறப்பாக செயல்படுவதை நாங்கள் பார்த்துள்ளோம். நான் குழந்தையாக இருந்தபோது, வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோரை கேப்டன்களாக பார்த்திருக்கிறேன். கபில்தேவ் இந்தியாவிற்காக உலகக் கோப்பையை வென்றார்.
அதேசமயம் இம்ரான் கான் பாகிஸ்தானுக்காக உலகக் கோப்பையை வென்றுள்ளார். எனவே கேப்டன் பதவிக்கு பந்து வீச்சாளர்கள் மிகச்சிறந்த தேர்வாக இருப்பார்கள். நமது ரசிகர்கள் பேட்ஸ்மேன்களையே அதிகம் விரும்புகிறார்கள் என்பது எனக்கு புரிகிறது. ஆனால், என்னை பொறுத்தவரை பந்துவீச்சாளர்களே ஆட்டத்தை நகர்த்திச் செல்கிறார்கள். அதனால் கேப்டன் பதவிக்கு அவர்கள் தான் சரியான தேர்வாக இருப்பார்கள்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
டெஸ்ட் கிரிக்கெட்டை தொலைக்காட்சியில் அதிகம் பார்த்த ஒரு தலைமுறையிலிருந்து வந்தவன் நான், இன்றுவரை, கிரிக்கெட்டில் அதுவே மிகச்சிறந்த ஃபார்மேட்டாக இருக்கிறது. மேற்கொண்டு அதில் நான் சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே ஒருநாள் மற்றும் டி20 என மற்ற எல்லா ஃபார்மேட்டுகளிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நான் உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.