நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் - அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய காவ்யா மாறன்!

Updated: Mon, May 27 2024 22:34 IST
Image Source: Google

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.  இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது. 

மேலும் இப்போட்டியை நேரில் சென்று பார்த்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், ஒரு கட்டத்திற்கு மேல் தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணிர் விட்ட காட்சிகள் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அறைக்கு சென்ற காவ்யா மாறன், தங்கள் அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதில் பேவிய காவ்யா மாறன், “நீங்கள் அனைவரும் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். அதை கூறவே நான் இங்கு வந்தேன். டி20 கிரிக்கெட்டை விளையாடும் விதத்தையே நீங்கள் மாற்றிவிட்டீர்கள். அனைவரும் நம்மைப் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டீர்கள். அனைவருக்கும் நன்றி. கடந்த ஆண்டு நாம் கடைசி இடத்தை பிடித்திருந்தாலும், இந்த முறை உங்களின் திறமையால் முன்னேறி வந்துள்ளோம்.

 

அதற்கு ரசிகர்களின் ஆதரவும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. கொல்கத்தா அணி வெற்றி பெற்றபோதிலும், எல்லோரும் நம்மைப் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், நாம் விளையாடிய கிரிக்கெட்டைப் பற்றி இன்னும் பேசுவார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர் காவ்யா மாறன் தங்கள் அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை