பெண் குழந்தைக்கு தந்தையான கே எல் ராகுல்; குவியும் வாழ்த்துக்கள்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 4ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஐடன் மார்க்ரம் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு அவருடன் இணைந்துள்ள நிக்கோலஸ் பூரனும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.
பின்னர் 76 ரன்களில் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிக்கோலஸ் பூரனும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் டேவிட் மில்லர் 28 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். இந்நிலையில் இன்றைய கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதன் காரணமாக அவர் இப்போட்டியை தவறவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக கடந்த ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வந்த நிலையில், ஏலத்திற்கு முன்னதாக அவரை அந்த அணி விடுவித்தது. இதனையடுத்து நடைபெற்ற வீரர்கள் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது கேஎல் ராகுலை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் அவர் குடும்பத்தினருடன் நேரம் செலவிட விரும்புவதன் காரணமாக இத்தொடரில் மேலும் சில போட்டிகளை அவர் தவறவிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.