சஞ்சீவ் கோயாங்காவின் உரையாடலை தவிர்த்த கேஎல் ராகுல் - வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஐயடன் மார்க்ரம் 52 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 45 ரன்களையும், இறுதியில் ஆயூஷ் பதோனி 36 ரன்களையும் எடுத்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கருண் நாயர் 15 ரன்னிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் போரல் 51 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 57 ரன்களையும், கேப்டன் அக்ஸர் படேல் 34 ரன்களையும் சேர்த்ததன் மூலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் இரு அணி வீரர்களும் பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, டெல்லி அணி வீரர் கேஎல் ராகுலிடம் கை குலுக்கி வாழ்த்து கூறினர். மேலும் சஞ்சீவ் கோயங்கா ராகுலிடம் பேச முயற்சித்த நிலையில், அதை கண்டு கொள்ளாத ராகுல் அவருடனான உரையாடலை தவிர்த்து அடுத்த நபரிடம் சென்றார்.
முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் தொடக்க சீசனில் கேஎல் ராகுல் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் லக்னோ அணி படுதோல்வியைத் தழுவி இருந்தது. இதனையடுத்து அணியின் கேப்டன் கேஎல் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அனைவரது முன்னிலையில் ஆக்ரோஷமாக பேசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Also Read: LIVE Cricket Score
இதனைத் தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து விலகிய கேஎல் ராகுல் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றிருந்தார். அதன்பின் இந்த ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேஎல் ராகுலை ஒப்பந்தம் செய்தது. இதனைத்தொடர்ந்து அவர் நடப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சஞ்சீவ் கோயங்காவுடனான உரையாடலை கேஎல் ராகுல் தவிர்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.