ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா அதற்கடுத்த போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை சுவைத்து 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்று தன்னை நம்பர் ஒன் டி20 அணி என்பதை நிரூபித்தது. கடந்த ஒரு வருடமாக இதேபோல் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்ற இந்தியா தொடர் வெற்றிகளை பெற்று நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய போதிலும் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியடைந்து பின்னடைவையும் விமர்சனங்களையும் சந்தித்தது. 

Advertisement

அதனால் அந்த தொடரில் சுமாராக செயல்பட்ட வீரர்கள் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ள இந்த தொடர் நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இத்தொடரில் இந்தியா வென்றாலும் புவனேஸ்வர் குமார் போன்ற சில முக்கிய வீரர்கள் இன்னும் முன்னேறாமல் இருப்பது இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த சில வருடங்களாக அற்புதமாக செயல்பட்டு ரோஹித் சர்மாவுடன் நிரந்தரமாக களமிறங்கும் தொடக்க வீரராக அறியப்படும் கேஎல் ராகுல் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய ஜிம்பாப்வே தொடரில் 1, 30 என சொற்ப ரன்களில் அவுட்டானார். 

Advertisement

அதைவிட ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டான அவர் கத்துக்குட்டி ஹாங்காங்க்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அதனால் அணியிலிருந்து நீக்குமாறு நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கையும் விமர்சனங்களையும் முன்வைத்ததால் இந்த ஆஸ்திரேலிய தொடரில் அழுத்தத்துடன் விளையாடிய அவர் முதல் போட்டியில் 55 ரன்கள் எடுத்தாலும் இந்தியா தோற்றது. ஆனால் 2ஆவது போட்டியில் 10 ரன்களில் ஆட்டமிழந்த அவர் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3ஆவது போட்டியில் மீண்டும் ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். 

அப்படி சுமாராக செயல்பட்ட அவர் தன் மீதான விமர்சனங்களை உடைத்து உலக கோப்பைக்கு முன்பாக பார்முக்கு திரும்ப அடுத்தாக நடைபெறும் தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறார். இந்நிலையில் விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் நலனையும் வெற்றியையும் கருதி விளையாடிய காரணத்தாலேயே கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் அவுட்டாகி தனது விக்கெட்டை தியாகம் செய்தார் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதரவு கொடுத்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அவர், “அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதோ அதைத்தான் அவர் செய்து வருகிறார். அதில் முதல் போட்டியில் அரை சதமடித்த அவர் 8 ஓவர்களுடன் நடைபெற்ற 2வது போட்டியில் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடியே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடியதால் அதிரடியாக விளையாடி அணிக்காக தனது விக்கெட்டை தியாகம் செய்தார். அதே போல் 3ஆவது போட்டியில் தேவைப்படும் ரன் ரேட் 9 ரன்களுக்கு மேல் இருந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தில் நீங்கள் அதிரடியாக விளையாடி சிறந்த தொடக்கத்தை பெறுவது எளிதான காரியமல்ல. அதனால் அங்கேயும் அவர் தன்னுடைய விக்கெட்டை தியாகம் செய்தார்.

இருப்பினும் விராட் கோலி போல சிறந்த ஷாட்களை அடிக்கும் போது ராகுலை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அந்த இருவருமே லைனில் அக்ராஸ் சென்று விளையாடுவது அவர்களுடைய பலம் கிடையாது. இருப்பினும் முன்னங்காலில் வந்து பிலிக் ஷாட் அடிக்கும் போது அவர்கள் அக்ராஸ் சென்று விளையாடலாம். ஆனால் அதே நேரத்தில் பேட்டை க்ராஸ் செய்து விளையாடுவது அவர்களுக்கு ஆபத்தை கொடுத்து விடும். எனவே அந்த தவறை அவர்கள் தவிர்த்தால் தொடர்ந்து பெரிய ரன்கள் அடிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News