ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. 

Advertisement

இந்நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியீடுவதற்கு நேற்றைய தினமே (அக்டோபர் 31) கடைசி நாள் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. அந்தவகையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக 6 வீரர்களை தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. 

Advertisement

அதன்படி கேகேஆர் அணி ரிங்கு சிங்கை 13 கோடிக்கும், வருண் சக்ரவர்த்தியை 12 கோடிக்கும், ஹர்ஷித் ரானா மற்றும் ரமந்தீப் சிங் ஆகியோரை தலா ரூ.4 கோடிக்கும் தக்கவைத்துள்ள நிலையில், நட்சத்திர ஆல் ரவுண்டர்கள் சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோரை தலா ரூ.12 கோடிக்கு தக்கவைத்துள்ளது.  இருப்பினும் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரை தக்கவைக்காததற்கான காரணத்தை கேகேர் அணியின் நிர்வாக இயக்குனர் வெங்கி மைசூர் விளக்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “வீரர்களை தக்கவைப்பது என்பது இரு தரப்பும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் விஷயமாகும். இது ஒரு உரிமையாளருக்கு இருக்கும் ஒருதலைப்பட்ச உரிமை அல்ல. வீரர்கள் பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் சில சமயங்களில் அந்த ஒப்பந்தம் பல்வேறு காரணிகளால் நடக்காது.

ஏனெனில் பணம் அல்லது யாரோ ஒருவர் தங்கள் மதிப்பை அதிகரிக்க விரும்பினாலோ அல்லது வேறு சில காரணங்களினாலோ அந்த ஒப்பந்தமானது அமையாது. இந்த முறை எங்கள் அணியின் தக்கவைக்கப்படும் வீரர்கள் பட்டியலில் நாங்கள் ஸ்ரேயாஸ் ஐயரை தான் முதலிடத்தில் வைத்திருந்தோம். ஏனெனில் கடந்த சீசனில் அவர் அணியின் கேப்டனாக செயல்பட்டதுடன் அணியை சாம்பியனாகவும் மாற்றினார். எனவே தலைமையைச் சுற்றி எல்லாவற்றையும் உருவாக்க வேண்டும் என்று எண்ணினோம்.

அதற்காகவே நாங்கள் அவரை 2022ஆம் ஆண்டு தேர்ந்தெடுத்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் காயம் காரணமாக பங்கேற்கா முடியாமல் போனது. இருப்பினும் அவர் காயத்தில் இருந்து திரும்பி வந்த மறுகணமே அவருக்கு கேப்டன் பதவியை வழங்கினோ. மேலும் நீங்கள் திரும்பி வரும்போது அணியின் கேப்டன் பதவியானது உங்களுடையது என்பதை நாங்கள் தெளிவாகக் கூறினோம்.

Advertisement

எனவே, அவர் மிகவும் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து ஒரு அற்புதமான வேலை செய்துள்ளார். மேலும் நான் அவருடன் தனிப்பட்ட முறையில் உரையாடியும் இருக்கிறேன். ஆனால் நாளின் முடிவில், மக்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு எது சிறந்தது, அவர்கள் செல்ல விரும்பும் திசை மற்றும் வணிக மதிப்பையும் தீர்மானிக்க வேண்டும். அதனால் அவர் அதனை மிக முக்கியமானதாக கருதினார்” என்று கூறியுள்ளார். 

 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News