ஐபிஎல் 2025: சிஎஸ்கேவை 103 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!

Updated: Fri, Apr 11 2025 21:24 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான கேகேஆர் அணியில் மொயீன் அலியும், சிஎஸ்கே அணியில் ராகுல் திரிபாதி, அன்ஷுல் கம்போஜ் ஆகியோரும் லெவனில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இன்றைய ஆட்டத்திலும் சென்னை அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. 

அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் டெவான் கான்வே 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர் ஓரளவு அதிரடியாக விளையாடும் முயற்சியில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் ராகுல் திரிபாதி 16 ரன்னிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா மற்றும் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய தீபக் ஹூடா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் நூர் அஹ்மத் ஆகியோர் தலா ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.

Also Read: Funding To Save Test Cricket

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் தூபே மூன்று பவுண்டரிகளுடன் 31 ரன்களையும், அன்ஷுல் கம்போஜ் 3 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் சென்னை சூப்பர் கின்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுனில் நரைன் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கேகேஆர் அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை