எல்எல்சி 2024: ஹைதராபாத்தை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது மணிப்பால்!

Updated: Fri, Oct 04 2024 09:00 IST
Image Source: Google

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் மணிப்பால் டைகர்ஸ் மற்றும் தோயம் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மணிப்பால் டைகர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய மணிப்பால் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மஸ்டர்ட் 6 ரன்களிலும், மனோஜ் திவாரி 9 ரன்களிலும், பினார் 11 ரன்களிலும், சௌரவ் திவாரி 8 ரன்களிலும், ஏஞ்சலோ பெரேரா 18 ரன்களிலும், குணரத்னே 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினார். இதனால் மணிப்பால் டைக்ர்ஸ் அணியானது 82 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அப்போது களமிறங்கிய திசாரா பெரேரா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

தொடர்ந்து அபாரமான ஆட்டாத்தை வெளிப்படுத்திய திசாரா பெரேரா 27 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் மணிப்பால் டைகர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்து. ஹைதராபாத் அணி தரப்பில் பிபுல் சர்மா மற்றும் குர்கீரத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கும் தொடக்கமானது சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் சாத்விக் வால்டன், ஜார்ஜ் வொர்க்கர் தலா 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரிக்கி கிளார்க்கும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ஷான் மார்ஷ் - குர்கீரத் சிங் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷான் மார்ஷ் 38 ரன்களுக்கும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பீட்டர் ட்ரெகோ 4 ரன்களிலும், பிபுல் ஷர்மா 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குர்கீரத் சிங் மான் 37 ரன்களையும், ஸ்டூவர்ட் பின்னி 20 ரன்களையும் சேர்க்க, ஹைதராபாத் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 144 ரன்களைச் சேர்த்தது. இரு அணிகளின் ஸ்கோரும் சமநிலையில் இருந்ததன் காரணமாக, இப்போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.  அதன்படி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியானது வெறும் 5 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதன்பின் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மணிப்பால் அணிக்கு டேனியல் கிறிஸ்டின் சிக்ஸர் அடித்து வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் மணிப்பால் டைகர்ஸ் அணியானது சூப்பர் ஓவரில் தோயம் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த திசாரா பெரேரா இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை