LPL 2024: வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது தம்புளா சிக்ஸர்ஸ்!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் தம்புளா சிக்ஸர்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரீஸா ஹென்ரிக்ஸ், குசால் பெரேரா, நுவனிந்து பெர்னாண்டோ, மார்க் சாப்மேன், தாவ்ஹித் ஹிரிடோய் என அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் தம்புளா நைட் ரைடர்ஸ் அணியானது 36 ரன்களுக்குள்ளேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேப்டன் முகமது நபி - சமிந்து விக்ரமசிங்கே இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது நபி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சமிந்து விக்ரமசிங்கேவும் 26 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இதனையடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, தம்புளா சிக்ஸர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கொழ்ம்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் பினுரா ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், மதீஷா பதிரானா மற்றும் துனித் வெல்லலாகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் ஏஞ்சலோ பெரேரா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த முஹ்மது வசீம் - கிளென் பிலீப்ஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் முஹ்மது வசீம் 15 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 15 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா 6 ரன்களிலும், துனித் வெல்லலாகே 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் திசாரா பெரேரா ஓரளவுக்கு தக்குப்பிடித்து 30 ரன்களை சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியானது 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தம்புளா சிக்ஸர்ஸ் அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இருப்பினும் நடப்பு சீசனில் தம்புளா சிக்ஸர்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவுசெய்தாலும் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.