இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் தம்புளா சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு தினேஷ் சண்டிமல் மற்றும் ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சண்டிமல் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 24 ரன்களுக்கும், கேப்டன் வநிந்து ஹசரங்கா 25 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரே ஃபிளெட்சர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், ஒரு பவுண்டரி 7 சிக்ஸர்கள் என 60 ரனக்ளைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் - ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் கமிந்து மெண்டிஸ் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெண்டிஸ் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 51 ரன்களையும், ஏஞ்சலோ மேத்யூஸ் 5 சிக்ஸர்களுடன் 44 ரன்களையும் சேர்த்தனர்.

Advertisement

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 222 ரன்களை சேர்த்தது. தம்புளா அணி தரப்பில் துஷன் ஹெமந்தா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரீஸா ஹென்றிக்ஸ் 2 ரன்களுக்கும், இப்ராஹிம் ஸத்ரான் ஒரு ரன்னிலும், லஹிரு உதானா 3 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் குசால் பெரேராவுடன் இணைந்த மார்க் சாப்மேன் ஓரளவு தாக்குப்பிடிக்க, அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் பெரேரா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் மார்க் சாப்மேன் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் முகமது நபியும் மூன்று ரன்களுடன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம் கடந்த நிலையில் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 74 ரன்களைச் சேர்த்த நிலையில் குசால் பெரேராவும் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய சொனால் தினுஷா 17 ரன்களுக்கும், சமிந்து விக்ரமசிங்கே 18 ரன்களுக்கும், துஷன் ஹெமந்தா 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, தம்புளா சிக்ஸர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 168 ரன்களை மட்டுமே சேர்த்தது. கண்டி ஃபால்கன்ஸ் அணி தரப்பில் கேப்டன் வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 54 ரன்கள் வித்தியாசத்தில் தம்புளா சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News