ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு செல்லும் - மனீந்தர் சிங்!

Updated: Mon, Dec 05 2022 21:27 IST
Maninder Singh sees a future India captain in Shreyas Iyer! (Image Source: Google)

சமீப காலமாக இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் தொடர்ந்து கேள்விக்குள்ளாகி வருகிறது. ஆசிய கோப்பை டி20 தொடர், உலகக்கோப்பை டி20 தொடர் என தொடர் தோல்விகளால் இத்தகைய கேள்விகள் எழுந்துள்ளது. நியூசிலாந்து டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்று விளையாடினர். இவர் 2022 ஐபிஎல்லில் முதல் முறையாக பங்கேற்ற குஜராத் அணிக்கு முதல் முறையாக கேப்டன் பொறுப்பேற்று கோப்பையை பெற்றுதந்தார்.

அப்போதிருந்து பிசிசிஐ-க்கு இவர் மீது கவனம் இருந்தது. நியூசிலாந்து தொடரிலும் நன்றாக செயல்பட்டதால், இனி டி20 போட்டிகளுக்கு இவர்தான் கேப்டனாக இருப்பார் என பிசிசிஐ சொல்லாமல் சொன்னதாக பேசப்பட்டு வருகிறது. ஒருநாள் தொடரிலும் ரோஹித் சர்மா எதிர்பார்த்த அளவிற்க்கு விளையாடவில்லை. 

மேலும், கேப்டன் பொறுப்பேற்றபின் பேட்டிங்கில் சரிவர செயல்படவில்லை. ஆகையால் 2023 உலகக்கோப்பை கவனத்தில் கொண்டு ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் வைத்திருக்கலாமா? அல்லது இப்போதே நீக்கிவிட்டு இன்னொருவரை நியமிக்கலாமா? என்கிற வாதங்கள் நடக்கின்றன.

எதுவாகினும், புதிய தேர்வுக்குழு இன்னும் ஓரிரு வாரங்களில் நியமிக்கப்பட்டுவிடும். அதன்பின் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதற்கிடையில், முன்னாள் இந்திய வீரர் மனீந்தர் சர்மா, ஒருவேளை அடுத்த கேப்டனாக யாரை நியமிப்பது என்கிற சிக்கல் வந்தால், அதற்கு நிச்சயம் ஸ்ரேயாஸ் ஐயர் சரியான வீரராக இருப்பார் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த 3-4 வருடங்களாக நான் ஷ்ரேயாஸ் ஐயரை கவனித்து வருகிறேன். ஐபிஎல் போட்டிகளில், இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் இவர் அணியை வழிநடத்தும் விதம் பிரமிப்பாக இருக்கிறது. நூதனமாக சிந்திக்கிறார். நன்றாக சிந்தித்து திட்டங்களை செயல்படுத்துகிறார்.

ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. உள்ளே வந்து சிறிது நேரம் எடுத்துக்கொண்டு, பின் விளையாட வேண்டும் என நினைக்கமாட்டார். முதல் பந்தில் இருந்தே பவுண்டரி அல்லது ஓரிரு ரன்கள் எடுத்து எங்கும் அணியின் ரன் குவிக்கும் விதம் குறையாமல் பார்த்துக்கொள்வார்.

நானே ஹர்திக் பாண்டியா வெள்ளை பந்து போட்டிகளுக்கு கேப்டனாக வேண்டும் என்று கூறியிருக்கிறேன். ஆனால் உண்மையில் எனக்குள் ஸ்ரேயாஸ் ஐயர் பற்றிய சிந்தனை இருந்துகொண்டே இருந்தது. அவர் 50 ஓவர் போட்டிகளில் கேப்டனாக நியமிக்கப்பட்டால் மொத்த அணியின் அணுகுமுறையும் முற்றிலும் மாறி, இன்னொரு கட்டத்திற்கு நிச்சயம் செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை