மீண்டும் நாடு திரும்பிய பதிரனா; சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

Updated: Sun, May 05 2024 16:28 IST
மீண்டும் நாடு திரும்பிய பதிரனா; சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுபாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெற்றுவரும் முக்கியமான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

தரம்சாலாவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஜிங்கியா ரஹானே 9 ரன்களிலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களிலும், ஷிவம் தூபே ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்துள்ளனர். 

இதையடுத்து டேரில் மிட்செல் மற்றும் மொயீன் அலி இணை விளையாடிவருகிறது. இப்போட்டியின் 8 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணியானது 3 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக மிட்செல் சாண்ட்னருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பயணிக்கவுள்ளதான் காரணமாக விசா புதுபித்தலுக்காக நாடு திரும்பினார். இதன் காரணமாக அவர் கடந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் மீண்டும் சிஎஸ்கே முகாமில் இணைந்த பதிரானா, இன்றைய போட்டியில் விளையாடாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பதிரானா குறித்து சிஎஸ்கே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

 

சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா, தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக இலங்கை திரும்புகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய அவர் 13 விக்கெட்டுகளை, 7.68 என்ற எகானாமியில் எடுத்துள்ளார். பதிரானா விரைவில் குணமடைய சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் வாழ்த்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மதீஷா பதிரானா நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன். ஏற்கெனவே சென்னை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் காயம் காரணமாக விளையாடாத நிலையில், தற்போது மதீஷா பதிரானாவும் காயத்தை சந்தித்ததுடன், இலங்கை திரும்பியுள்ளது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை