இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான முகமது ஷமி சமீப காலமாக இந்திய அணியில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அதன் காரணம் என்ன? என்பது சரிவர தெரியாத நிலையில், தற்போது அதுகுறித்து ஒரு பரபரப்பான தகவல் கிசுகிசுக்கப்படுகிறது. இந்திய அணி கடந்த சில தொடர்களில் முகமது ஷமியை முதன்மை பந்துவீச்சாளராக பயன்படுத்தவில்லை.
பும்ரா இல்லாத நேரங்களில் மட்டுமே அவர் அணியில் இடம் பெற்று வந்தார். ஏன் ஷமிக்கு வாய்ப்பு குறைந்து வருகிறது என்ற கேள்வி இருந்து வந்தது. இந்த நிலையில் தான், ஷமி ஒரு வழக்கு சிக்கலில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஷமியின் மனைவி ஹாசின் ஜாஹன் அவர் மீது கொல்கத்தா காவல்துறையில் புகார் அளித்தார். தன்னை ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக அவர் புகாரில் கூறி இருந்தார்.
அந்த வழக்கில் கொல்கத்தா காவல்துறை ஷமி மற்றும் அவரது சகோதரர் முகமது ஹாசிப்புகு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து கீழமை நீதிமன்றத்தில் அவர் பெயில் வாங்கினார். ஆனால், அதை எதிர்த்து ஹாசின் ஜாஹன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், உச்ச நீதிமன்றம் இதை கீழமை நீதிமன்றத்திலேயே பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டது.
இதை அடுத்து கடந்த செவ்வாய் கிழமை நீதிமன்றத்தில் அவர் பெயில் வாங்கினார். அந்த தகவல் வெளியானதை அடுத்து வேறு சில தகவல்களும் கூறப்படுகிறது. அவர் இந்த வழக்கு காரணமாகவே இந்திய அணியில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கலாம் எனவும், உலகக்கோப்பை தொடரின் போது இந்த வழக்கில் அவரை கைது செய்ய நேரிட்டால் அது இந்திய அணி குறித்த தவறான எண்ணத்தை மற்ற கிரிக்கெட் நாடுகளிலும் ஏற்படுத்தி விடும் என்பதாலும் அவரை முதன்மை பந்துவீச்சாளராக காட்டாமல் பிசிசிஐ அறிவுரையின்படி கேப்டன் ரோஹித் சர்மா அவரை இரண்டாம் கட்ட வீரராக அணியில் வைத்திருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.