ஹைதராபாத்தில் முகமது சிராஜுக்கு உற்சாக வரவேற்பு - வைரலாகும் காணொளி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு நேற்றைய தினம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீரர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின் பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த பேரணி மற்றும் பாராட்டு விழாவில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்றனர். மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.125 கோடி பரிசுத்தொகைக்கான காணொளியையும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வழங்கினார்.
இதனையடுத்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிய வீரர்களுக்கும் உற்சாக வரவேற்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிற்கு அவரது சொந்த ஊரான ஹைதராபாத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடி வரவேற்பளித்தனர். முன்னதாக சிராஜ் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், நேற்றைய தினம் இந்நிகழ்ச்சியானது ஹைதராபாத்தில் நடைபெற்றது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்நிலையில் முகமது சிராஜிற்கு ரசிகர்கள் கொடுத்த பிரமாண்ட வரவேற்பு குறித்த காணொளிகளானது தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு மஹாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்னாத் சிண்டே நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததுடன், மஹாராஷ்டிரா அரசு தரப்பில் ரூ.11 கோடி பரிசுத்தொகையையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.