இம்பேக்ட் பீல்டருக்கான விருதை வென்றார் முகமது சிராஜ்!

Updated: Fri, Dec 15 2023 13:39 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான தொடரை நிர்ணயிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 100 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ச்வால் 60 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 35 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 25 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 13.5 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தும் அசத்தியது. மேலும் இப்போட்டியில் சதமடித்த சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகன் மற்றும் ஆட்டநாயகானகவும் தேர்வுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த டி20 தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய வீரருக்கு 'இம்பேக்ட் பீல்டர்' என்ற விருதை பிசிசிஐ வழங்கியுள்ளது. அதன்படி இந்த 'இம்பேக்ட் பீல்டர்'விருதை வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வென்றுள்ளார். இவர் நேற்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை மெய்டனாக வீசியதுடன் 3 ஓவர்களை வீசி வெறும் 13 ரன்களை மட்டுமே கொத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை