தோனியும் நானும் நெருங்கிய நண்பர்கள் அல்ல - யுவராஜ் சிங்!

Updated: Sun, Nov 05 2023 15:45 IST
தோனியும் நானும் நெருங்கிய நண்பர்கள் அல்ல - யுவராஜ் சிங்! (Image Source: Google)

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இதனால் 2011 போல சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சச்சின், சேவாக் ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டான நிலையில் கம்பீருடன் இணைந்த விராட் கோலி முடிந்தளவுக்கு வெற்றிக்கு போராடினார்.

இருப்பினும் தில்சானின் அபாரமான கேட்ச்சால் அவுட்டான விராட் கோலியை தொடர்ந்து யுவராஜ் சிங் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது களமிறங்கிய தோனி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 91 ரன்களை விளாசி மறக்க முடியாத சிக்சருடன் கோப்பையை வெல்ல உதவினார். சொல்லப்போனால் அத்தொடரில் ஆரம்பம் முதலே சுமாரான ஃபார்மில் தடுமாறி வந்த அவர் தொடர் நாயகனாக அசத்திய யுவராஜ் சிங்கிற்க்கு பதிலாக பேட்டிங் செய்ய வந்தது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. 

இருப்பினும் முரளிதரனை சிறப்பாக எதிர்கொள்ள யுவராஜ் தடுமாறுவார் என்பதால் தோனி களமிறங்கியதாக கடந்த காலங்களில் நிறைய செய்திகள் வெளி வந்தன. இந்நிலையில் அப்போட்டியில் வலது – இடது கை பேட்ஸ்மேன்கள் கலவை வேண்டும் என்பதற்காக கம்பீர் அவுட்டானால் தாமும் விராட் அவுட்டானால் நீங்களும் களமிறங்கலாம் என்று தோனியுடன் பேசி முடிவெடுத்திருப்பதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “2011 உலக கோப்பை இறுதிப்போட்டியில் கம்பீர் அவுட்டானால் நான் களமிறங்குவேன் என்றும் விராட் அவுட்டானால் தோனி களமிறங்குவார் என்றும் பேசி முடிவெடுத்திருந்தோம். அது தான் நட்பை விட முக்கியமானதாகும். ஏனெனில் நாட்டுக்காக நாங்கள் கடினமாக விளையாடுகிறோம். அதனால் அவர் சிறப்பாக விளையாடுவதற்கு நான் வாழ்த்துகிறேன். அதே போல நான் சிறப்பாக விளையாட அவரும் வாழ்த்துவார் என்பதை அறிவேன். ஒருமுறை தோனி காயமடைந்த போது நான் அவருக்கு ரன்னராக செயல்பட்டேன்.

குறிப்பாக காயத்துடன் அவர் 90களில் இருந்த போது 100 ரன்களை தொடுவதற்காக நான் வேகமாக ஓடி டைவ் அடித்தேன். அதே போல உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக 48 ரன்களில் இருந்த போது நான் 50 ரன்களை தொடுவதற்காக மஹி சில பந்துகளை வேண்டுமென்றே தடுத்தார். இவ்வாறே எங்களுடைய நட்பு இருந்தது. தற்போது அவரும் நானும் ஓய்வு பெற்று விட்டோம். இப்போது நேராக சந்தித்தாலும் “நீங்கள் யார் என்று தெரியாது” என்பது போல் அல்லாமல் நாங்கள் நண்பர்களாகவே பார்க்கிறோம். இப்போதும் விளம்பர நிகழ்ச்சிகளில் நடித்து கடந்த காலங்களை பற்றி மகிழ்ச்சியாக பேசுவோம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை