ரஞ்சி கோப்பை 2022: இறுதிப்போட்டிக்கு மத்திய பிரதேசம், மும்பை அணிகள் முன்னேற்றம்!

Updated: Sat, Jun 18 2022 16:43 IST
Mumbai march into Ranji Trophy final, to meet Madhya Pradesh (Image Source: Google)

உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு அரையிறுதி போட்டியில் மத்திய பிரதேசம் - பெங்கால் அணிகளும், மற்றொரு அரையிறுதியில் மும்பை - உத்தர பிரதேச அணிகளும் மோதின.

மத்திய பிரதேசம் - பெங்கால் அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 341 ரன்கள் அடித்தது. பெங்கால் அணியில் மனோஜ் திவாரி மற்றும் ஷபாஸ் அகமது ஆகிய இருவரும் சதமடித்துமே அந்த அணி 273 ரன்கள் மட்டுமே அடித்தது. 

அதன்பின் 68 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய மத்திய பிரதேச அணி 2ஆவது இன்னிங்ஸில் 281 ரன்கள் அடித்தது. மொத்தமாக 349 ரன்கள் முன்னிலை பெற்றது மத்திய பிரதேச அணி. 350 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பெங்கால் அணி 2ஆவது இன்னிங்ஸில் 175 ரன்கள் மட்டுமே அடித்து 174 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மத்திய பிரதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மும்பை மற்றும் உத்தர பிரதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சர்ஃபராஸ் கானின் அபார சதங்களால் முதல் இன்னிங்ஸில் 393 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய உத்தர பிரதேச அணி வெறும் 180 ரன்கள் மட்டுமே அடித்தது. 213 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய மும்பை அணி 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 533 ரன்களை குவித்த நிலையில், 4ஆம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற மும்பை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து வரும் 22ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை