வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சில்ஹேட்டில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் தமிம் இக்பால் - லிட்டன் தாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 23 ரன்களைச் சேர்த்திருந்த தமிம் இக்பால் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த லிட்டன் தாஸ் - நஜ்முல் ஹொசைன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டனர். இதில் இவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடக்கம் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் சதமடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
ஆனால் 70 ரன்களைச் சேர்த்திருந்த லிட்டன் தாஸ், காம்பெர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுபக்கம் 73 ரன்களில் நஜ்முல் ஹொசைன் ஹுமே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாகில் அல் ஹசன் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹிரிடோய் - முஷ்பிக்கூர் ரஹிம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அயர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர் .
பின் 49 ரன்களில் ஹிரிடோய் ஆட்டமிழந்து நூழிலையில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முஷ்பிக்கூர் ரஹிம் 60 பந்துகாளில் 14 பவுண்டரி, 2 சிக்சர்கள் என தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்களைச் சேர்த்தது.
இதில் முஷ்பிக்கூர் ரஹிம் 100 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். அயர்லாந்து அணி தரப்பில் கிரஹாம் ஹுமெ 3 விக்கெட்டுகளையும், மார்க் அதிர், கர்டின் காம்பெர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்க ஆயத்தமனது.
ஆனால் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான் மூன்றாவது ஒருநாள் போட்டி மார்ச் 23ஆம் தேதி சில்ஹேட்டில் நடைபெறவுள்ளது.