யுவி-க்கு முன் தோனி களமிறங்கியது எந்த சுயநலமும் இல்லை - முத்தையா முரளிதரன்!

Updated: Wed, Jun 28 2023 12:30 IST
Muttiah Muralitharan Opens Up About World Cup 2011 Said He Knew Ms Dhoni Will Promote Himself In Fin (Image Source: Google)

ஐசிசியின் 2023ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை வரும்  தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2011 உலக கோப்பையில் சச்சின், சேவாக் போன்ற சீனியர்களையும் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற அனுபவம் கலந்த இளம் வீரர்களையும் சிறப்பாக வழி நடத்திய தோனி தலைமையில் ஆரம்பம் முதலே சீரான வெற்றிகளை பெற்று, நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதைத்தொடர்ந்து மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஜெயவர்த்தனே சதத்தால் 275 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு சேவாக், சச்சின் ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க விராட் கோலியும் போராடி அவுட்டானார். அதனால் 114/3 என தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக நல்ல ஃபார்மில் இருக்கும் யுவராஜ் சிங் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அத்தொடர் முழுவதும் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் ஃபார்மின்றி தவித்த தோனி முன்கூட்டியே களமிறங்கி முக்கிய நேரத்தில் அபாரமாக செயல்பட்டு கௌதம் கம்பீருடன் இணைந்து 91 ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார். குறிப்பாக சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கம்பீர் 97 ரன்களில் அவுட்டான போதிலும் மறுபுறம் கடைசி வரை நின்ற தோனி சிக்சருடன் சூப்பர் ஃபினிஷிங் செய்து 28 வருடங்கள் கழித்து இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவினார்.

அந்த சமயத்தில் ரவி சாஸ்திரியின் வர்ணணையில் அவர் அடித்த சிக்சரை இப்போது நினைத்தாலும் ஒவ்வொரு இந்திய ரசிகனுக்கும் புல்லரிக்கும் என்றால் மிகையாகாது. அப்படி முக்கிய நேரத்தில் கேப்டனாக முன்னின்று ஃபினிஷிங் செய்ததால் தோனிக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டாலும் நங்கூரமாக நின்று போராடிய கம்பீர் தான் அதற்கு தகுதியானவர் என இப்போதும் விமர்சனங்கள் காணப்படுகின்றன.

அதை விட நல்ல ஃபார்மில் இருக்கும் யுவராஜுக்கு பதிலாக வேண்டுமென்றே பெயர் வாங்குவதற்காக களமிறங்கி சுயநலத்துடன் ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதை தோனி வென்றதாக இப்போதும் சலசலப்புகள் காணப்படுகின்றன. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் இறுதிப்போட்டியில் கௌதம் கம்பீர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருக்கு கிடைக்க வேண்டிய மொத்த பாராட்டுகளையும் தோனி தன் பக்கம் திருப்பி விட்டதாக நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுவதை இன்றும் பார்க்கலாம்.

அதனால் அதில் எந்த சுயநலமும் இல்லை என்று தெரிவிக்கும் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இது பற்றி மும்பையில் நடந்த 2023 உலகக்கோப்பை வெளியீட்டு விழாவில் இதுகுறித்து பேசியுள்ளார். அதில், “அந்த உலகக் கோப்பையில் அந்த சமயத்தில் 4ஆவது இடத்தில் களமிறங்குவதற்கு சரியான பேட்ஸ்மேனாக இருந்தாலும் யுவராஜ் எனக்கு எதிராக தடுமாறாமல் கச்சிதமாக விளையாட மாட்டார் என்பது எனக்கு தெரியும். அதே சமயம் ஐபிஎல் தொடரில் சென்னைக்காக விளையாடிய போது நான் தோனிக்கு எதிராக வலைப்பயிற்சியில் நிறைய வீசியுள்ளேன். அதன் காரணமாக என்னை எப்படி சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை தோனி அறிவார்.

எனவே அந்த சமயத்தில் எனக்கு எதிராக அவர் விக்கெட் கொடுக்க விரும்பவில்லை. இருப்பினும் அந்த போட்டியில் நான் விக்கெட் எடுக்காத போதிலும் சிறப்பாகவே பந்து வீசிக் கொண்டிருந்தேன். மேலும் அப்போது பனியின் காரணமாக பந்து அதிகமாக சுழலவில்லை. அந்த நிலையில் எதிர்புறம் கம்பீர் விளையாடிக் கொண்டிருந்த போது விராட் கோலி விக்கெட் விழுந்ததும் தோனி தான் வருவார் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் நான் சென்னை அணிக்காக விளையாடியதால் என்னை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை