மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!

Updated: Mon, Oct 13 2025 22:50 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது பதிப்பானது தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீராங்கனைகள் ஃபர்கானா ஹக் 30 ரன்களுக்கும், ருபியா அக்தர் 25 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து களமிறங்கிய ஷர்மிம் அக்தரும் அரைசதம் கடந்த கையோடு பெவிலியன் திரும்பினார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சொர்னா அக்தர் 51 ரன்களையும், கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன்களையும் சேர்த்து அணியை சவாலான ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன் மூலம் வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 232 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நோன்குலுலேகோ மிலாபா 2 விக்கெட்டுகளையும், நதின் டி கிளார்க், சோளே டிரையான் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிர்பார்த்த தொடக்கமானது கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் தஸ்மின் பிரிட்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், அன்னேக் போஷ் 28 ரன்னிலும், கேப்டன் லாரா வோல்வார்ட் 31 ரன்னிலும், அன்னேரி டெர்க்சன் 2 ரன்னிலும், சினோலா ஜாஃப்டா 4 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த மரிஸான் கேப்-சோளே ட்ரையான் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் இருவரும் தங்களின் அரைசதங்களை பூர்த்தி செய்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். அதன்பின் 56 ரன்களைச் சேர்த்த கையோடு மரிஸான் கேப் விக்கெட்டை இழக்க, 62 ரன்களை சேர்த்த கையோடு சோலே டிரையானும் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த நதின் டி கிளார்க் - மசபடா கிளாஸ் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நதின் டி கிளார்க் 37 ரன்களையும், மசபாடா கிளாஸ் 10 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

Also Read: LIVE Cricket Score

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 49.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய சோளே டிரையான் ஆட்டநாயகி விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை