இந்திய அணியின் கூடுதல் பயிற்சியாளர்களாக அபிஷேக்,டென் டோஸ்கேட் தேர்வு - தகவல்!

Updated: Sat, Jul 20 2024 16:03 IST
Image Source: Google

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் திராவிட்டின் பதவிக் காலம், அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை 2024 தொடருடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியது. இதில் முதலில் ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லங்கர், ஸ்டீபன் ஃபிளெமிங் உள்ளிட்டோரது பெயர்கள் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளருக்கான போட்டியில் இருந்தது. அவர்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரின் பெயர் முன்னிலையில் இருந்தது. 

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் அதிகாராப்பூவர்மாக அறிவித்தார். மேற்கொண்டு எதிர்வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், அத்தொடரில் இருந்த கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பதவியும் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதேசமயம் இந்திய அணியின் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் அணியில் நீடிக்கும் குழப்பத்தை அதிகரித்து வருகிறது. ஏனெனில் இந்திய அணியின் புதிய பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்வதில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பிசிசிஐ இடையே முரன்பாடுகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் கௌதம் கம்பீர் தன்னுடன் கேகேஆர் மற்றும் லக்னோ அணியில் இணைந்து பணியாற்றிய வீரர்களை பயிற்சியாளர்களாக நியமிக்கும் படி வலிவுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர், பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ரியான் டென் டெஸ்காட்டே ஆகியோரை நியமிக்க வேண்டும் என கம்பீர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ-க்கு இதில் உடன்பாடில்லாத காரணத்தினால் தான் இதுவரை மற்ற பயிற்சியாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கௌதம் கம்பீர் ஆலோசனையை ஏற்று இந்திய அணியின் கூடுதல் பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் டென் டெஸ்காட்டேவை பிசிசிஐ நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேற்கொண்டு அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக திலீப் தொடர்ந்து நீடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் பந்துவீச்சு பயிற்சியாளருக்கான தேர்வில் தான் தற்போது பெரும் குழப்பம் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் பிசிசிஐ தரப்பில் முன்னாள் வீரர்கள் லக்ஷ்மிபதி பாலாஜி, ஜாகீர் கான் ஆகியோருடன் இணைந்து தற்போது மோர்னே மோர்கலும் போட்டியில் இணைந்துள்ளார். இதனால் இவர்களில் யார் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இருப்பினும் இலங்கை தொடருக்கு முன்னதாக இதற்க்கான தெளிவு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை