எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா? - மகேந்திர சிங் தோனி பதில்!

Updated: Thu, Aug 01 2024 20:21 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன. மேலும் அணி உரிமையாளர்களுக்கான கூட்டமும் நேற்றைய தினம் மும்பையில் நடைபெற்று முடிந்துள்ளது. 

முன்னதாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றுடனே வெளியேறியது. கடந்த முறை மகேந்திர சிங் தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த சிஎஸ்கே அணி இம்முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது. 

இதையடுத்து அடுத்த ஐபிஎல் தொடருக்கான வேலைகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இறங்கிவுள்ளது. அதன்படி எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ரிஷப் பந்தை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதேசமயம் அணியின் முன்னாள் கேப்டனும், 5 முறை கோப்பையை வென்று கொடுத்தவருமான மகேந்திர சிங் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகங்களும் அதிகரித்து வருகின்றன.

ஏனெனில் தற்சமயம் 41 வயதை எட்டியுள்ள அவர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருடனே ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரிலும் அவர் சிஎஸ்கேவிற்காக விளையாடுவார் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த மகேந்திர சிங் தோனியிம், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா என்ற கேள்வி எழுப்பட்டது. 

அதற்கு பதிலளித்துள்ள எம் எஸ் தோனி, “எதிர்வரும் ஐபிஎல் தொடரில் தக்க வைக்கப்படும் வீரர்களுக்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அந்த விதிமுறைகள் தெரிந்த பின் நாங்கள் முடிவெடுப்போம். ஏனெனில் தற்போது முடிவு எங்களுடைய கையில் இல்லை. எனவே விதிமுறைகள் இறுதிச் செய்யப்படும்போது நாங்கள் முடிவெடுப்போம். அந்த முடிவை நாங்கள் அணியின் நன்மைக்காக எடுப்போம்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஏனெனில் நாளின் இறுதியில் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பமாகும். அதனால் விதிமுறைகள், தக்க வைப்புகளின் அடிப்படையில் சிஎஸ்கே அணிக்கு எது சிறந்தது என்பதை பார்த்து அதற்கு தகுந்த நல்ல முடிவை எடுப்போம்” என்று கூறியுள்ளார். இதனால் வரவிருக்கும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக தோனி விளையாடுவாரா அல்லது ஓய்வை அறிவிப்பாரா என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை