அமெரிக்காவை ஒயிட்வாஷ் செய்து அசத்திய நேபாள்!

Updated: Mon, Oct 21 2024 12:19 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணிகளில் மிக முக்கிய இடங்களை பிடித்துள்ள அணிகளாக நேபாள் மற்றும் அமெரிக்கா ஆகியவை திகழ்கின்றன. சமீபத்தில் கூட நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்த அணிகள் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. 

இந்நிலையில் நேபாள் அணியானது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் நேபாள் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் நேபாள் - அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது டல்லாஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. 

அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணியில் கேப்டன் மொனங்க் படேல் 2 ரன்னிலும், ஆண்ட்ரிஸ் கஸ் 2 ரன்னிலும், ஆரோன் ஜோன்ஸ் 13 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த சாய்தேஜா முக்காமல்லா மற்றும் மிலிந்த் குமார் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முக்காமல்லா அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 58 ரன்கள் எடுத்த நிலையில் முக்காமல்லாவும் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் மிலிந்த் குமார் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ஷயான் ஜஹாங்கீர் 9 ரன்களையும், ஹர்மீத் சிங் 10 ரன்களை சேர்த்தனர். இப்போட்டியில் இறுதிவரை அட்டமிழக்காமல் இருந்த மிலிந்த் குமார் 43 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தர். இதன்மூலம் அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. நேபாள் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷோம்பால் கமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணிக்கு அனில் ஷா - ஆசிஃப் ஷேக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அனில் ஷா 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஆசிஃப் ஷேக்குடன் இணைந்த குஷால் புர்டலும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆசிஃப் ஷேக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு, 50 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் குஷால் புர்டலுடன் இணைந்த குஷால் மல்லாவும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

இருவரும் இணைந்து அபாரமாக விளையாடியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குஷால் புர்டெல் 40 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய குஷால் மல்லா 44 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நேபாள் அணியானது 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் அமேரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை நேபாள் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அமெரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை