நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

அந்த அணியில் வில் யங் 43 ரன்களையும், டம் லேதம் 63 ரன்களையும், கேன் வில்லியம்சன் 44 ரன்களையும் சேர்க்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் மிட்செல் சான்ட்னர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 76 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 347 ரன்களை குவித்த நிலையில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டரில் ஜோ ரூட் 32 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த பென் ஸ்டோக்ஸ் - ஒல்லி போப் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஒல்லி போப் 24 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 27 ரன்னிலும் விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 35.4 ஓவர்களில் 143 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.

நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூக், மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 202 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லேதம் 19 ரன்னிலும், வில் யங் 60 ரன்னிலும், வில்லியம் ஓ ரூர்க் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் தனது 33ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினர்.

பின் ரச்சின் ரவீந்திரா 44 ரன்னிலும், வில்லியம்சன் 156 ரன்னிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் 60 ரன்களையும், டாம் பிளெண்டல் 44 ரன்களையும், மிட்செல் சான்ட்னர் 49 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 453 ரன்களை குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேக்கப் பெத்தெல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு 658 ரன்கள் என்ற இமாலய இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது.

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஸாக் கிரௌலி 5 ரன்னிலும், பென் டக்கெட் 4 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு18 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ஜேக்கப் பெத்தெல் 9 ரன்களுடனும், ஜோ ரூட் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியது மூன்றாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.

Advertisement

பின் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட்டும், 76 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக்கப் பெத்தெலும் விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய வீரர்களில் அட்கிசன் 43 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதமூலம் நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இருப்பினும் இங்கிலாந்து அணி இத்தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News