நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலம் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் கேன் வில்லியம்சன், அணியின் கேப்டன் டிம் சௌதீ ஆகியோர் தங்களது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினர். 

Advertisement

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி இப்போட்டியில் பேட்டிங்கில் பெரிதளவில் சோபிக்க தவறியது. அந்த அணியின் தொடக்க வீரர் வில் யங் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டாம் லேதமும் 38 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் அடுத்து தனது 100ஆவது போட்டியில் விளையாடிய கேன் வில்லியம்சன் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

Advertisement

பின்னர் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 04, டெரில் மிட்செல் 04, டாம் பிளண்டல் 22, கிளென் பிலீப்ஸ் 02 போன்ற பேட்டர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 45.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ண்டு 162 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஷ் ஹசில்வுட் 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் - உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டீவ் ஸ்மித் 11 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 16 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய கேமரூன் க்ரீன் 25 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 21 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர்.

இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை எடுத்துள்ளது. இதில் மார்னஸ் லபுஷாக்னே 45 ரன்களுடனும், நாதன் லையன் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 38 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News