நான் பார்த்த சிறந்த ஒருநாள் போட்டிகளில் இதுவும் ஒன்று - ஹஸ்மதுல்லா ஒமர்ஸாய்!
ஆஃப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களைக் குவித்தது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் ஸத்ரான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 177 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 41 ரன்களையும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 40 ரன்களையும் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், லியாம் லிவிங்ஸ்டோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதுடன் 120 ரன்களையும், பென் டக்கெட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தலா 38 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 317 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி, “ஒரு அணியாக இன்று நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த வெற்றியால் எங்கள் நட்டு மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்தை முதல்முறையாக வீழ்த்தினோம். இப்போது நாங்கள் மீண்டும் அதனை செய்துள்ளோம். நாளுக்கு நாள் முன்னேறி வருகிறோம்.
இப்போட்டியை நாங்கள் நன்றாகக் கட்டுப்படுத்தினோம். அதற்கு கிடைத்த முடிவில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஸத்ரான் ஒரு திறமையான வீரர். இப்போட்டியின் ஆரம்பத்திலேயே நாங்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து பின் தங்கி இருந்த நிலையில், ஸத்ரானும் நானும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. நான் பார்த்த சிறந்த ஒருநாள் போட்டிகளில் இதுவும் ஒன்று.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதுடன், பந்துவீச்சிலும் அபாரமாக இருந்தார். எங்களிடம் திறமையான இளைஞர்கள் மற்றும் சில மூத்த வீரர்கள் உள்ளனர். அணியில் உள்ள அனைவருக்கும் அவர்களின் பங்கு என்ன என்பது தெரியும். அனைவரும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் வேகத்தை அதிகரிப்போம் என்று நம்புகிறோம். இந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கையைத் தரும்” என்று தெரிவித்துள்ளார்.